பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Monday, December 27, 2010


சைவம்



காலைப் பிடித்தேறிப் 
பின் 
கழுத்தில் அமர்ந்து 
சங்கைப் 
பிரித்துண்ணும் அரக்கர்களே...!

தாயைப் போல் 
உயிரை 
விதையிட்டு....
உரமிட்டு...
பின் தானே 
வேருடன் அறுக்கும் வெறியர்களே...!

கேட்பார் இல்லாத ...
அழகிய மங்கையரின்  
பச்சைத் 
தலை மயிரை
தனக்கென வெட்டும் தனவான்களே...!

உணவுக்கு வெட்டியது 
போதாதென... பின் 
உலைக்கு எரியாய் 
வீட்டிற்கு  'நிலை'யாய் 
என 
வெட்டி அடுக்கும் வேங்கைகளே...!

ஆக்குபவன் நீ என்பதால்...
அழிப்பதும் உம்  உரிமையோ...?
இறந்தவன் அனைவரும் 
இவ்வுலகம் மீண்டால்...
அறுத்தவன் உன் கதி...?

அரிவாளைப் பதம் பார்த்து 
சிரம் -  புறம்  பிரித்து 
குருதியால் பூமியை 
நனைப்பவன் மட்டுமே  
"அசைவன்
எனக் கூற 
உனக்கென்ன உரிமையுள்ளது...?

முதலில் கூறிய தென்னையும் 
பின் சொன்ன நெர்ப்பயிரும் 
கூந்தல் இழக்கும் வாழையும் 
உன் வீட்டில் 
மேசையாய், சன்னலாய்
கதவை 
நிற்கும் மர மக்கள்
வந்து கூறட்டும்...
நீ "சைவம்" என்று...!

அதுவரை....
"நான் சைவம்
எனக் கூறி 
மாறு தட்டாமல்
புத்தியைக் 
கூறு தட்டு...!

உயிர் - அது 
விலங்கோ... தாவரமோ....
கொல்லும்
எவனுக்கும் 
சைவம் - அசைவம் 
எனப் 
பிரித்துப் பகுப்படுத்தும் 
உரிமையுமில்லை...!
விளக்கம் தந்து 
விலகிக் கொள்ளும்
தகுதியுமில்லை..!

இயற்கையின் பிடியில் 
உலகம் 
உள்ள வரை...
உனக்கும் எனக்கும் 
நட்பு துளிரும்...!
இல்லையென்றால்
நீ என்னையும் 
நான் உன்னையும் 
தின்னலாம் விதி நேர்ந்தால்...!

                          --------------------    தாமரையான்...!

Wednesday, November 3, 2010

காதல் தூல்...!

நேர்
 கொண்ட பாதை...!
ஒற்றை வழித்தடம்...!
எனக்கும் உனக்கும்...!
 
வளைந்ததில்லை...
நெளிந்ததில்லை...
எதையும் நினைத்து 
அலைந்ததில்லை...!
 
ஈரமில்லாமல் 
காய்ந்தபோதிலும்...
வெயிலில் 
வெந்தபோதிலும்...
வாடியதில்லை
நீயும் நானும்...!
 
காய்ந்த சருகில் 
கவன் 
கொண்டு எரிந்தது போல்....
சட்டென விழுந்தது....
முதல் மழைத் துளி 
உன்மீதும்...
அழகிய பாவை விழி
என்மீதும்...!

                           
முதல் தூரலும்...
முதல் காதலும்....
எளிதாய் 
பற்றிவிட்டது 
என்னையும் உன்னையும்...!
 
வறண்டு 
கிடந்த 
மனதும், மண்ணும் 
சுகமாய் ஈரமானது 
மழைப் பாவையால்..! 
 
மண் வாசமும் 
பெண் நேசமும் 
வேர் முதல் ஊற்றெடுத்து 
உயிர் வரை பாய்ந்தது...!
 
ஆனால்...!
பந்தி பரிமாறி 
வாய் 
கட்டிய கதையாய் 
ஆனது 
எனக்கும் உனக்கும்...!
 
ம்ம்ம்...சோ'வென கொட்டி 
தீர்க்க 
வேண்டிய 
தூரலும் பார்வையும்  
வந்த வழி கடந்து செல்ல....
 
தூரலும் பார்வையும் 
மீண்டும் 
கிடைக்குமா..?
என 
மேகம் நோக்கி நீயும் - அவள் 
முகம் நோக்கி நானும்...! 

மேகம் சிந்திய 
முதல் வியர்வை....
குளமாய் உன் ஞாபகத்தில்..!
அவள் செலுத்திய 
முதல் பார்வை....
ஆழமாய் என் இதயத்தில்...!

"அமைதியை கெடுப்பதே 
மண்ணுக்கும் 
பெண்ணுக்கும் 
வேலையா..?" - என
நீயும் நானும் 
கடிந்தது 
இன்னும் என் ஞாபகத்தில்...!

ம்ம்ம்....
கடக்கட்டும் 
காலம்...!
நடக்கட்டும் 
நாட்கள்...!
மறவாதது...மாறாதது...
முதல் மழையும்...! 
முதல் காதலும்...! 
என ஊருக்கு உரைப்போம் 
என் "தெரு" நண்பா...!
                           ------------ தாமரையான் !
         

Saturday, September 18, 2010

நட்புடைமை...!


தாய் மண்ணின்
தரை பிளந்து
இடியெனும்  தாளம்
தட்டினும்....

விண்வெளி
தன் வாய்பிளந்து
வெள்ளியாய்
உருக்கினும்....

பூமிதன் சதை கிழிந்து
பச்சைப்
புல் கருகினும்...

இனியில்லை இம்மண்ணில்
உழைப்பும்
பிழைப்பும் என்றேயாயினும்...

உள்ளங்கையிருக்கும்
பிடி உணவு தவிர
இம்மியளவும் இனி
இல்லை என்றாயினும்...

அழிவின் விளிம்பில் உயிர்
தத்தளிப்பினும்;
தன் கையில்
இருக்கும்
ஒரு பிடி உணவைக் கூட...

கொடுக்க மறுக்கும்
விரோதம்...
கொடுப்பதைத் தடுக்கும்
சமூகம்...
கெடுத்துக் கொடுக்கும் 
வஞ்சகம்...
கொடுத்துப் பின் எதிர்பார்க்கும் 
சொந்தம்...

ஆனால்...
பித்தம் கலந்த
இரத்தம்
தவிர்த்து...
மொத்தம் தர
சித்தம்
செய்யும் 
தூய்மையது -
கணக்கில் இரண்டு...!

ஒன்று...
வயிற்றில் உறைவிடம்
தந்து
பூமியில் வாழ்வை
வளம்பெற விதைப்பது.... தாய்மை...!

மற்றொன்று....
தாய்மை தந்த
வயிறு
மிகச் சிறிதென்றுரைத்து
அதைவிடப் பெரிதாம்
தன்
இதயத்தை இடமாக்கி
கொடுப்பது.... நட்பு...! 

டலில் உருவாகி...
யிரில் கருவாகி...
ர்ப்புப் பாராமல்
ம்மையில் தேயாமல்
னந்தத்தில் ஆர்ப்பரிக்கும்
ற்புதம்.... ''நட்பு"

அன்பைப்  பயிர் செய்து
அரவணைப்பை அறுவடை செய்யும்
ஒரேயொரு
வினோத விளைநிலம்.....!

வரியில்லை...
செலவில்லை...
நஷ்டமில்லை...
கஷ்டமில்லை...
இந்த உடமைக்கு...!
முதலீடு செய்து
முதலாளியாவோம்
நட்பெனும்  உடமைக்கு...!

 

நட்புடன்...
தாமரையான்...! :)

Wednesday, June 30, 2010

சுட்ட மழை...!



வறட்சியை மட்டும் 
குத்தகையாய் 
கொண்ட கறுப்புப் பிரதேசம்...!

சூரியன் புதையுண்ட 
பூமி போல் 
கொதித்த தட்ப வெப்பம்...!

வறண்டு துவண்டு 
போன 
உயிர் நாள நதிகள்...!

அறுவடை செய்ய 
ஏதுமின்றி 
உறங்கும் விளைநிலங்கள்...!

வறட்சியின் ஆட்சியில் 
அழிவின் 
வாழ்வு அமோகம் அங்கு...!

இருப்பினும் 
திடீரென சிவந்தது 
அந்த 
வெண்ணிற வானம்...!

செந்நிற மேகங்கள் 
சூழ 
கொட்டியது அங்கு மழை...!

மழை நீர் விழுந்து 
நிலம் 
நனைத்த போதிலும் 
வளம் இல்லை...!

ஆம்...!
நீர் நனைத்தும் 
வளப்படாத
அந்த அதிசய தேசம்...
ஏழையின் கன்னம்...!

பசி என்னும் 
தட்பவெட்பம் 
மாற்றிய வானிலையில் 
உருவான கண்ணீர் மழை...!

வானக் கண்களில் 
உருவாகி 
கன்ன  தேசத்தில்
பெய்த 
சுட்ட மழை
அது...!

வறுமையின் பிள்ளைகள் 
ஏராளம் 
இங்கு...!
இவர்கள் உடம்பில் 
எஞ்சியது 
உயிரில் ஒரு பங்கு...!

சுவாசத்தின் சூட்டிலும் 
கண்ணீரின் சூட்டிலும் 
உயிர் வாழும் 
ஏழை எஜமான்கள் இவர்கள்...!

வயிற்றில் வெறுமையும்
பார்வையில் கருமையும் 
வாழ்க்கையில் வறுமையுமே 
இன்றுவரை 
இவர்களின் உடைமை...!

இந்த நிலையம் மாறும்...!
ஆனால்  
அதுவரை இவர்கள் 
உண்ணுவதை 
மறவாமல் இருந்தால் 
மகிழ்ச்சி...!

இயற்கை அன்னையின் 
தராசு சமம் 
என்பதை அறியும் 
வேளையில் 
தற்கொலைக்கு 
முயல்வாள்
அவள் என்பதில் ஐயமில்லை...!

                                  .............. தாமரையான் !